காமினியின் கென்னல் டைமண்ட் (சவால் சிறுகதை)

சவால் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.
 
"டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, காமினியை காப்பாத்துங்க. பல வருஷமா இவள என் மக போல வளர்த்துட்டு வர்ரேன்" பரந்தாமன் பரபரப்பாக இருந்தார்.

மயக்கதிலிருந்த காமினியின் ரத்தம் கசிந்த வாயை திறந்து நாக்கை பார்த்தார். மெலிதான ஊதா நிறத்தில் இருந்தது.

"என்னாச்சு?"

"தெரியல சார், அந்த போலீஸ்காங்க தான் சார் அடிச்சிருப்பாங்க. போயி கேட்டதுக்கு என்கிட்டேயே சண்டைக்கு வர்ராங்க, என்னத்த பண்ணுறது. நம்ம நேரம்னு பேசாம வந்துட்டேன். இந்த மாசத்துல மட்டும் இந்த மாதிரி நடக்குறது இது ரெண்டாவது தடவை. இவ ஒழுங்கா இருந்தா அவனுங்க ஏன் சார் அடிக்க போறாங்க? ஒண்ணும் ஆகாதுல்ல சார்?"

"இந்த கண்டிஷனுக்கு சயனாசிஸ்னு பேரு. ஆக்ஸிஐன் கொடுத்தா சரி பண்ணிடலாம். நர்ஸ், உடனே ஆக்ஸிஐன் மாஸ்கை வைங்க" என்று பக்கத்திலிருந்த நர்ஸிடம் கூறிக்கொண்டே பல்ஸ் பார்க்க தொடங்கினார்.

சில மணிநேரம் கழித்து, காமினி மெதுவாக கண் முழித்து பார்த்த போது தான் மருத்தவமனையில் இருப்பது புரிந்தது. டாக்டர் பக்கத்து பெட்டில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்


"மிஸ்டர் பரந்தாமன், டாக்டர் தணிகாசலம் பேசுறேன். காமினி மறுபடி தப்பிச்சுட்டா."

"மறுபடியுமா? சரி விடுங்க டாக்டர். இங்க தான் வருவா. நான் பார்த்துக்குறேன். அவளுக்கு இப்ப ஒண்ணும் இல்லையே?"

"மயக்கம் தெளியுற வரைக்கும்தான் ஆக்ஸிஐன் தேவைப்படும். இப்ப அவளுக்கு ஒண்ணும் இல்லை.அடிபட்ட தழும்பு கொஞ்ச நாள்ல சரியாயிடும்."

"ரொம்ப தாங்க்ஸ் டாகடர்"

போனை வைக்கும்போது, பேரன் சிவா தீபாவளி துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.
"தாத்தா, வா நம்ம திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடலாம்."

"நான் வரலடா, நீ மட்டும் விளையாடு"

"நான் மட்டும் எப்படி தாத்தா விளையாடுறது, நீ ரொம்ப போரு தாத்தா" என்று கத்திக் கொண்டே வாசலில் சென்று விளையாட தொடங்கினான்.

சிறிது நேரத்தில் வாசலில் அவனின் குரல் கேட்டது
"வா நம்மளாவது திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடலாம்."

காமினி அவனை சட்டை செய்யாமல் அந்த தெருவில் இருந்த பெரிய பில்டிங்கையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

" சரி, நீ தான் இப்ப திருடன். நான் உன்ன சுட போறேன். நீ இப்ப தப்பிச்சு ஒடனும்." சொன்னபடியே நடிக்க ஆரம்பித்தான்.

"உனக்கு எத்தன தடவ சொல்லுறது, உன்ன வெளில விட்டா மத்தவுங்களுக்குதான் ஆபத்து"

 “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா

"டேய் போடா அந்தப்பக்கம்" என்றபடி பரந்தாமன் வாசலுக்கு வந்தார்.

"நீ ரொம்ப போரு தாத்தா" என்று மறுபடியும் சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

பரந்தாமனுக்கு காமினியை திட்ட மனம் வரவில்லை.

மறுநாள் காலையில் அந்த பெரிய பில்டிங்கில் போலீஸ் டிரில் சத்தம் கேட்டது. அது போலீஸ் கென்னல் பில்டிங். அங்கேதான் போலீஸ் நாய்களை டிரையினிங் செய்வார்கள். எக்மோரில் இந்த பில்டிங் மிகவும் பிரபலமானதுகூட.

காமினி சத்தம் ஏதும் செய்யாமல் மெதுவாக வீட்டைத்தாண்டி அந்த பில்டிங்கு சென்றாள். அந்த பில்டிங் பக்கதிலிருந்த திட்டில் நின்று பார்த்தால் அந்த க்ரவுண்ட் நன்றாக தெரிந்தது.


பத்து பன்னிரெண்டு நாய்கள் டிரையினிங்கில் இருந்தன. டைமண்டடை அந்த டிரையினிங்கில் தேடினாள். டைமண்ட் அந்த டிரையினிங்கில் இருந்த ஒரு புது K-9 வகை நாய். வந்து சில மாதங்கள்தான் ஆகியிருக்கும்.

காமினியும் பரந்தாமனும் வாக்கிங் போகும்போதெல்லாம் டைமண்ட்டை பார்ப்பாள். என்னவோ அவளுக்கு  டைமண்ட்டை ரொம்ப பிடித்துவிட்டது. டைமண்ட்டுக்கும் இவளை பிடிக்கும்தான். ஒருமுறை இவளை பார்த்துவிட்டு ஒடிவரும்போது, காக்கி உடையிலிருந்த டிரையினர் டைமண்ட்டை பிடித்துவிட்டார். பலமுறை இதே கதை நடந்திருக்கிறது.

இதோ இன்றும் காமினி மறுபடி முயற்சிக்கிறாள்.

பரந்தாமனுக்கு வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்டது. வாசலுக்கு வந்து பார்த்தார். காமினி டைமண்ட்டுடன் நினறு கொண்டிருந்தாள். பரந்தாமனுக்கு காமினி மேல் முதலில் ஆத்திரம் தான் வந்தது. இருந்தாலும் அவளின் மன உறுதியை கண்டு வியந்தார்.
 
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"எனக்கு உன்மேல கோபம் இல்ல காமினி. உனக்கு பிடிச்சத நீ செய்யுற. நீ நினைச்சத சாதிச்சிட்டதான். ஆனா முன்னாடியே சொன்னமாதிரி டைமண்ட் இந்த வீட்டுல இருக்க முடியாது. ரொம்ப பிரச்சன வரும். எனக்கு இதுக்குமேல என்ன சொல்லுறதுன்னு தெரியல?"

காமினிக்கு இது எந்த அளவுக்கு புரிந்தது என்று தெரியவில்லை. ஆனால் டைமண்ட்டுடன் நாலுகால் பாய்ச்சலில் ஓட ஆரம்பத்தாள். காதல் வலிமையானது. கண்டிப்பாக அவர்கள் காதல் வெற்றி பெரும்.


டிஸ்கி: சவாலில் க்ரைம் கலந்த வரிகள் இருந்ததால் ஒரு சவாலாக, க்ரைமில்லாமல் முயற்சித்து எழுதியது. நாய்களுக்கும் காதல் வரலாம் இல்லையா? படித்தபின் பிடித்திருந்தால் ஒரு வரி சொல்லுங்களேன். கதை (மற்றும் படம்) எழுத தகவல்கள் தந்த நம்ம சென்னை இணைய தளத்திற்கும், Dog Owner's Home Veterinary Book-ன் கூகுள் தளத்திற்கும் நன்றிகள்- கதிர்கா


4 comments:

Radhakrishnan said...

வாழ்த்துகள் கதிர். கதை நன்றாக இருக்கிறது.

அப்பாதுரை said...

அடடே! இது யாருக்கும் தோணாத கருங்க. வாழ்த்துக்கள்

கதிர்கா said...

@V.Radhakrishnan, @அப்பாதுரை - நன்றி நண்பர்களே!!!

எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்குங்க! வாழ்த்துக்கள்!